ஆகுபெயர் என்றால் என்ன?
தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு
இத்தொடரில் வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிற பொருளை தருகிறது. இது இயல்பான பெயர்ச்சொல் ஆகும்.
வீட்டிற்கு வெள்ளை அடித்தான்.
இத்தொடரின் வெள்ளை என்பது வெண்மை நிறத்தை குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பை குறிப்பிடுகிறது.
இவ்வாறு ஒன்றன் பெயர் அதனை குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் என அழைக்கப்படுகிறது.
பொருள், இடம், காலம் ,சினை, பண்பு, தொழில் ஆகிய ஆறு வகையான பெயர்ச்சொற்களிலும் ஆகு பெயர்கள் உண்டு.
பொருளாகு பெயர் :
மல்லிகை சூடினாள்
மல்லிகை என்னும் முழு பொருளின் பெயர் அதன் ஒரு உறுப்பாகிய மலரை குறிக்கிறது. இவ்வாறு பொருளின் பெயர் அதன் சினை ஆகிய உறுப்புக்கு ஆகிவருவது பொருளாகு பெயர் எனப்படும். இதனை முதலாகு பெயர் எனவும் கூறுவர்.
இடவாகுபெயர் :
சடுகுடு போட்டியில் தமிழ்நாடு வெற்றி பெற்றது.
தமிழ்நாடு என்னும் பெயர் அவ்விடத்தைச் சேர்ந்த விளையாட்டு அணியை குறிப்பதால் இது இடவாகு பெயர் எனப்படும்.
காலவாகு பெயர் :
திசம்பர் சூடினாள்
இத்தொடரில் திசம்பர் என்னும் காலப்பெயர் அக்காலத்தில் மலரும் பூவைக் குறிப்பதால் இது காலவாகு பெயர் என அழைக்கப்படுகிறது.
சினையாகு பெயர் :
தலைக்கு ஒரு பழம் கொடு.
இத்தொடருக்கு ஆளுக்கு ஒரு பழம் கொடு என்பது பொருளாகும். இவ்வாறு சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகி வருவது சினையாகு பெயர் என அழைக்கப்படுகிறது.
பண்பாகு பெயர்:
இனிப்பு தின்றான்.
இத்தொடரில் இனிப்பு என்னும் பண்புப் பெயர் தின்பண்டங்களை குறிப்பது பண்பாகுபெயர் ஆயிற்று.
தொழிலாகு பெயர்:
பொங்கல் உண்டான்.
இத்தொடரில் பொங்கல் (பொங்குதல்) என்னும் தொழில் பெயர் தொழிலால் உருவான உணவினை குறிப்பதால் இது தொழிலாகு பெயர் என அழைக்கப்படுகிறது.
இரட்டைக்கிளவி:
தங்கை விறுவிறுவென நடந்து சென்று தோட்டத்தில் மலர்ந்த மலர்களை கலகலவென்று சிரித்தபடி மளமளவென கொய்க்க தொடங்கினாள்.
இத்தொடரில் விரு விரு, கலகல, மள மள ஆகிய சொற்களை கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிலும் அசைச் சொற்கள் இரண்டு இரண்டாக இணைந்து வந்துள்ளன. இவற்றைப் பிரித்து பார்த்தால் பொருள் தருவதில்லை.
இவ்வாறு இரட்டையாக இணைந்து வந்து பிரித்தால் பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி என்பர்.
அடுக்குத்தொடர் :
சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அமுதன் திடீரென பாம்பு பாம்பு பாம்பு என்று கத்தினான். எங்கே எங்கே என்று கேட்ட வெளயே மற்ற சிறுவர்கள் அவன் அருகே ஓடி வந்தனர். இல்லை இல்லை சும்மாதான் சொன்னேன். என்று சொல்லி சிரித்தப்படியே ஓடினாள் அமுதன். மற்ற சிறுவர்கள் அவனை பிடி பிடி பிடி கத்திக்கொண்டே மற்றவர்கள் துரத்தினார்கள்.
இப்பகுதியில் சில சொற்கள் இரண்டு, மூன்று ,நான்கு முறை இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அச்சம் ,விரைவு , சினம் போன்ற காரணங்களால் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை தொடர்ந்து வருதலை அடுக்குத்தொடர் என்பர். அடுத்த தொடரில் பல முறை இடம்பெறும் ஒவ்வொரு சொல்லும் பொருள் உடையது.