மனிதன் தனக்குத் தேவையான எல்லாப் பொருள்களையும் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. தனக்குத் தேவையான சில பொருள்களை உற்பத்தி செய்யும் பிறரிடமிருந்து வாங்குவான்.
தான் உற்பத்தி செய்யும் பொருள்களில் சிலவற்றைப் பிறருக்கு விற்பான். இவ்வாறு ஒரு பொருளைப் பிறரிடம் இருந்து வாங்குவதும் பிறருக்கு விற்பதும் வணிகம் ஆகும். பொருள்களை விற்பவரை வணிகர் என்பர்; வாங்குபவரை நுகர்வோர் என்பர்.
பண்டமாற்று வணிகம் :
நம்மிடம் கூடுதலாக இருக்கும் பொருள்களைக் கொடுத்து நமக்குத் தேவையான பொருள்களைப் பெற்றுக் கொள்வது பண்டமாற்று வணிகம் ஆகும். நெல்லைக் கொடுத்து அதற்குப் பதிலாக உப்பைப் பெற்றனர்.
ஆட்டின் பாலைக் கொடுத்துத் தானியத்தைப் பெற்றனர். இந்தச் செய்திகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
இக்காலத்தில் கூட வீட்டிற்கே வந்து பழைய செய்தித்தாள்கள், பயனற்ற நெகிழிப் பொருள்கள் போன்றவற்றைப் பெற்றுக்கொள்கின்றனர். அதற்குப் பதிலாக வீட்டிற்குப் பயன்படும் பொருள்களைத் தருகின்றனர்.