புறப்பொருள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?

  புறப்பொருள் என்றால் என்ன? அதன் வகைகள்  யாவை?

புறப்பொருள் எனப்படுவது, வாழ்க்கைக்குத் துணைபுரியும் கல்வி, செல்வம், புகழ், வீரம், அரசியல் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறுவது. அகப்பொருள் வாழ்வியல் எனில், புறப்பொருள் உலகியல் ஆகும். 

புறம்பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை. புறத்திணைகள் வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.

Puraththinai

1.வெட்சித்திணை :

 பகைநாட்டின்மீது போர் தொடங்குமுன், அந்நாட்டிலுள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன், தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்து வரச்செய்வது வெட்சித்திணை. அவ்வீரர்கள் வெட்சிப்பூவைச் சூடிச் செல்வார்கள்.

2. கரந்தைத் திணை : 

வெட்சி வீரர்களால் கவர்ந்துசெல்லப்பட்ட தம் ஆநிரைகளைக் கரந்தைப் பூவைச் சூடிச்சென்று மீட்பது, கரந்தைத்திணை.

3. வஞ்சித்திணை :

மண்ணாசை காரணமாகப் பகைவர் நாட்டைக் கைப்பற்றக் : கருதி வஞ்சிப்பூவைச் சூடிப் போருக்குச் செல்வது, வஞ்சித்திணை. 

4. காஞ்சித்திணை

தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடல் காஞ்சித்திணை. 

5. நொச்சித்திணை : 

பகையரசனால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காத்தல் வேண்டி, உள்ளிருந்தே, வெளியே இருக்கும் பகையரசனோடு நொச்சிப்பூவைச் சூடிப் போரிட்டு, அம்மதிலைக் காப்பது நொச்சித்திணை.

6. உழிஞைத்திணை : 

உழிஞைப் பூவைச் சூடிய தன் வீரர்களுடன் மாற்றரசன் கோட்டைக்குள் புகுந்து மதிலைச் சுற்றி வளைத்தல் உழிஞைத்திணை.

7. தும்பைத் திணை : 

பகைவேந்தர் இருவரும் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, தம் வீரர்களுடன் போரிடுவது தும்பைத் திணை. இவ்வீரர்கள் தும்பைப் பூவைச்சூடிப் போரிடுவர்.

8. வாகைத்தினை 

வெற்றிபெற்ற மன்னன் வாகைப்பூச் சூடி மகிழ்வது, வாகைத்திணை. 

9. பாடாண்திணை: 

பாடுதற்குத் தகுதியுடைய ஓர் ஆண்மகனின் கல்வி, வீரம், செல்வம், புகழ், கருணை முதலியவற்றைப் போற்றிப் பாடுவது, பாடாண்திணை. (பாடு + ஆண் + திணை = பாடாண்திணை)

10. பொதுவியல் திணை : 

வெட்சிமுதல் பாடாண்வரை உள்ள புறத்திணைகளின் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுவது, பொதுவியல் திணை.

11. கைக்கிளைத்திணை

கைக்கிளை என்பது ஒருதலைக் காமம். இஃது ஆண்பால் கூற்று , பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

 12. பெருந்திணை :

 பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். இதுவும் ஆண்பாற் கூற்று , பெண்பாற் கூற்று என இருவகைப்படும்.

                 

  வெட்சி நிரைகவர்தல், மீட்டல் கரந்தையாம்,வட்கார்மேற் செல்வது வஞ்சியாம் – உட்கா(கு) எதிரூன்றல் காஞ்சி, எயில்காத்தல் நொச்சி, அதுவளைத்த லாகும் உழிஞை, -அதிரப் பொருவது தும்பையாம், போர்க்களத்து மிக்கார் செருவென் றதுவாகை யாம்.                                                                         – புறப்பொருள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top