புணர்ச்சி விதிகள் என்றால் என்ன?
சொற்புணர்ச்சியின்போது நிலைமொழி இறுதியிலும் வருமொழி முதலிலும் ஏற்படும் மாற்றங்களை சுருங்கச் சொல்லும் வரையறைகளை புணர்ச்சி விதிகள் என்பர்.
புணர்ச்சி விதிகளின் பயன்கள் யாவை ?
- மொழியை பிழையின்றி கையாளவும்
- பாடல் அடிகளை பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறியவும்
மொழி ஆளுமையை புரிந்து கொள்ளவும் இந்தப் புணர்ச்சி விதிகள் பயன்படுகின்றன.
உயிரீற்றுப் புணர்ச்சி :
அ) உடம்படுமெய் புணர்ச்சி :
நிலைமொழியின் இறுதி எழுத்தும் , வரும் மொழியின் முதல் எழுத்தும் உயிர் எழுத்துக்களை இருந்தால் உச்சரிப்பின் போது ஒலி உடன்பாடு இல்லாமல் இடைவெளி ஏற்படும். எனவே உடன்படாத அவ்விரு மொழிகளையும் சேர்த்துப் புணர்க்கவும் வரும் மெய், உடம்படுமெய் ஆகும். பதினெட்டு மெய்களுள் ய் , வ் என ஆகிய இரு மெய்கள் மட்டும் உடம்படுமெய் களாக வரும்.
(எ. கா)
காட்சியழகு- காட்சி+ய்+அழகு ( இகர ஈறு)
தீயணைப்பான் – தீ + ய்+ அணைப்பான் (ஈகார ஈறு)
கலையறிவு- கலை+ய் +அறிவு (ஐகார ஈறு)
மாவிலை – மா+வ்+இலை ( ஆகார ஈறு)
பூவழகு-பூ+வ் +அழகு (ஊகார ஈறு)
சேயிழை-சே+ய்+இழை[ஏகார ஈறு யகர,வகர உடம்படுமெய்கள் பெற்று வருகின்றன]
சேவடி- சே+வ்+அடி (👆👆 மேலே உள்ளதை போன்ற புணர்ச்சி அமைப்பு )
குற்றியலுகரப் புணர்ச்சி :
1) குற்றியலுகரச் சொற்களின் நிலைமொழியின் இறுதியில் உள்ள குற்றியலுகரம் வருமொழியின் முதலில் உள்ள உயிர் எழுத்துடன் புணரும்போது, தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழியின் முதல் எழுத்தாகிய உயிரெழுத்துடன் புணரும்.
(எ. கா)
மாசற்றார்-மாசு +அற்றார்
மாசு(ச்+உ)+அற்றார் -” உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும் “என்னும் விதிப்படி “உ “மறைந்தது
மாச்+அற்றார்- “உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே “என்னும் விதிப்படி “மாசற்றார் “எனப் புணர்ந்தது.
2) ட் , ற் என்னும் இரு மெய்களோடு ஊர்ந்து வரும் நெடில் தொடர் ,உயிர் தொடர்க் குற்றியலுகரங்கள் வரும் மொழியோடு சேரும்போது ஒற்று இரட்டித்து புணரும்.
(எ. கா)
வீடு + தோட்டம் = வீட்டு + தோட்டம் = வீட்டுத்தோட்டம்
காடு+மரம் = காட்டு மரம்
முரடு+ காளை = முரட்டு +காளை = முரட்டுக்காளை
பகடு +வாழ்க்கை = பகட்டுவாழ்க்கை
சோறு + பானை = சோற்று + பானை
ஆறு +நீர் = ஆற்றுநீர்
வயிறு +பசி = வயிற்று +பசி = வயிற்றுப்பசி
கயிறு + வண்டி = கயிற்றுவண்டி
முற்றியலுகர புணர்ச்சி:
நிலைமொழியின் இறுதியில் உள்ள முற்றியலுகரமும் குற்றியலுகரத்தை போலவே , தான் ஏறிய மெய்யை நிறுத்தி உகரம் மறையும். பின் நிலைமொழி இறுதியில் உள்ள மெய் வருமொழி முதல் எழுத்தாகிய உயிர் எழுத்துடன் புணரும்.
வரவறிந்தான் — வரவு +அறிந்தான்
வரவு (வ் +அ ) + அறிந்தான் – ” முற்றும் அற்றும் ஓரோவழி ” என்னும் விதிப்படி ‘ உ ‘ மறைந்தது.
வரவ் +அறிந்தான் – ‘ உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே ‘ என்னும் விதிப்படி ‘ வரவறிந்தான் ‘ எனப் புணர்ந்தது .